நற்றிணை59
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 5
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. 10
பொருள்:-
அவள் என் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாள். இனியுமா வருந்தவேண்டும்? – போர் முடிந்து மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
என் பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவள் துன்புறும் ஊர் முல்லை பூத்துக்கிடக்கும் நிலம். அது மேட்டாங்காடு. வேட்டுவன் வாழும் ஊர்.
வேட்டுவன் உடும்பைக் கொல்வான். மணல் புற்றில் இருக்கும் ஈயலைக் கிண்டி எடுப்பான். பகலெல்லாம் இப்படி முயன்று தோளில் சுமந்துகொண்டு வருவான். அந்தப் பல்வேறு பணிச்சுமையை மறந்து இல்லத்தில் இருக்கும்போது இருமடைக் கள்ளைப் பருகிச் செருக்குடன் இருப்பான்.
அங்கே அவள் இருக்கிறாள். அன்பு கலந்த நெஞ்சத்தோடு இருக்கிறாள். என்னிடம் கொண்ட ஆசையோடு இருக்கிறாள். இன்னும் அவள் துன்புற வேண்டுமா?
இருமடைக் கள் = இரண்டு முறை புளித்த கள்
உயவுமார் = துன்புற்று
செருக்கு = பெருமிதம்
தலைமணந்தன்று = தலைமை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறாள்
புரிந்த = விரும்பிய
வன்புலம் = மேட்டாங்காடு
Comments
Post a Comment