நற்றிணை 394

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
வன் பரல் முரம்பின், நேமி அதிர,           5
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?

பொருள்:-
திசையெங்கும் பரந்து கிடக்கும் அந்தக் காட்டுக்கு மரங்கள்தான் தலை. அங்கே தலை விரித்து நிற்கும் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு கோட்டான் (குடிஞை) குழறுகிறது. பொன்னில் அணிகலன் செய்யும் தட்டான் பொன்னைத் தட்டும் ஓசை இனிமையாகக் கேட்பது போல் அந்தக் கோட்டானின் குழறல் இனிமையாகக் கேட்கிறது.

காதலன் வந்தான். என்னோடு இருந்தான். இன்பம் தந்துவிட்டு மீள்கிறான்.
ஒப்பனை செய்யப்பட்டு ஒளி வீசும் உயர்ந்த தேர். (இழை கிளர் நெடுந்தேர்) அதில் கட்டிவைத்திருக்கும் மணி. (பெய்ம்மணி) வறண்டு பரல் கற்களுடன் முரம்பு பட்டுக் கிடக்கும் நிலத்தில் அதன் சக்கரமும் (நேமி) மணியும் ஒலி எழுப்பத் தேர் செல்கிறது.

செல்க, (சென்றிசின்) வாழ்க, என்று சொல்லி வழியனுப்பி வைக்கிறேன். கடுமையான பனி பொழிந்துகொண்டிருக்கும் காலத்தில் அனுப்பிவைக்கிறேன். வழியில் செல்லும்போது (இடைச்சுரத்து) மேகம் (எழிலி) சுரந்து மழை பொழியுமோ? பொழிவதால் அவன் மார்பில் கோடு கோடாக அணிந்திருக்கும் குறும்பொறிச் சந்தனம் ஈரம் பட்டு மேலும் குளுமையாகுமோ? குளிரில் நடுங்குவானோ? (என்னை அணைத்த வெதுவெதுப்பு இல்லாமல் போய்விடுமே) அதற்காக நான் நோகிறேன். (வருந்துகிறேன்)
புணர்ச்சிக்குப் பின்னர் தலைவனை அனுப்பிவைக்கும் தலைவி இவ்வாறு நினைக்கிறாள்.
 

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்