நற்றிணை 361

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,     5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்து இழையோளே.

பொருள்:-

  முல்லை சிறிய பூதான். ஆனால், பெருமளவில் மணம் கமழும். அவற்றை அவனும் சூடிக்கொண்டான். அவனுக்குக் குற்றேவல் செய்யும் இளைஞர்களும் சூடிக்கொண்டனர். அவன் மணியொலி பாடும் தேரில் வந்தான். வானத்தையே தாண்டிக் கடப்பது போல் தாவிப் பறக்கும் குதிரைகள் அவன் தேரை இழுத்துவந்தன. பெருமழை பொழிந்திருக்கும் முல்லை நிலத்தின் வழியே வந்தான். மாலை நேரம் ஒளி மங்கும் (மான்ற) வேளையில் வந்தான். அவன் நெடுந்தகை (ஓங்கிய தோற்றமும் உயர்ந்த குணமும் படைத்தவன்). மனைவியின் போக்கரிய மன உளைச்சலைப் (படர்) போக்கினான். அவன் வந்ததும் விருந்தினரைப் பேணுவதில் அவன் மனைவி விருப்பம் காட்டினாள். அவன் இல்லாதபோது கழன்ற அணிகலன்கள் இப்போது திருத்தமுடன் இருப்பிடத்தில் நிலைகொள்ளும் பேற்றினைப் பெற்றன.
தோழியின் மகிழ்ச்சி.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்