நற்றிணை 367

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் 5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர்: நமரும்        10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர், இப் பனி படு நாளே.

பொருள்:-
வளைந்து ஒருகண்ணால் பார்க்கும் காக்கையில், கூரிய வாயை உடைய பெண்காக்கையானது பறக்க நடுங்கும் தன் குஞ்சைத் தழுவிக்கொண்டு, தன் ஆண்காக்கையை (கிளை = உறவு) அழைக்கும்.
வள்ளல் மூதில் அருமன் நெல்லஞ் சோறும், கருனைக் கிழங்குக் குழம்பும் வந்தவர்களுக்கெல்லாம் வழங்குவான்.
கருங்கண் கருனை – கருமையான கண் கொண்ட கருனைக்கிழங்கு
செந்நெல் வெண்சோறு – நன்செய் வயலில் விளைவது செந்நெல். அதன் அரிசியில் சமைப்பது வெண்ணிறச் சோறு
சூர்மகளுக்குப் படையல் செய்த பின்னர் பலிச்சோறாக அதனை வழங்குவான். சூர்மகளுக்குச் செய்த படையல் காக்கைக்கு வைக்கப்படும். அந்தப் பலிச் சோற்றை உண்ணுவதற்காக குறுகிய பந்தற்கால் கொண்ட செல்வச் செழிப்புள்ள (கூழ்) நன்மனையில் அந்தக் காக்கைகள் கூட்டமாகக் காத்திருக்கும்.  
அருமன் வாழும் ஊர் ‘சிறுகுடி’யில் இது நிகழும்.
மென்மையான இயல்பினை உடைய அரிவைப் பருவத்தவளே!
நீ உன் கூந்தலில் சூடியிருப்பது போல் குவளைப் பூவும், நல்ல மணம் கமழும் முல்லைப் பூவும் சேர்த்துக் கட்டிய மாலையை (கோதை) அணிந்துகொண்டு உன் காதலரின் ஏவலாளரும் (இளையர்) வந்துள்ளனர். உன் காதலரும் விரிந்த பிடரிமயிர் கொண்ட குதிரைமீது வருவார். குதிரையை மெதுவாக ஓட்டிக்கொண்டு (பரியாது கடைஇ) வருவார். பனி பொழியும் நாளில் (தை மாதத்தில்) வருவார்.
திருமணக் கோலத்தில் தலைவன் வரவிருப்பதைத் தலைவிக்குத் தோழி தெரிவிக்கிறாள்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்