நற்றிணை 321

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,     5
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும் கொல்லோ, திருந்து இழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே.

பொருள்:-
செம்மையான நிலவளம் கொண்ட முல்லை நிலத்தில் மெல்லிய மயிர் கொண்ட புருவையாடு கழுத்தில் கட்டிய மணியின் இனிய ஒலியுடன் தங்குமிடம் நோக்கித் திரும்பும் மாலை வேளை இது. பார்ப்பன மகளிர் அகன்ற துளைவாயுடன் பூத்திருக்கும் முல்லை மலரைத் தோளின் புறத்தில் தொங்கும்படி அணிந்துகொள்ளும் மாலை வேளை இது. பொழுது மலையில் இறங்கும் மாலை வேளை இது. நான் இல்லாத வறுமையில் வாடும் என் மனைவி இருக்கும் இடத்துக்கு உடனே செல்லவேண்டும். வலவ! தேரை விரைந்து செலுத்துக. குருந்து பூத்திருக்கும் சிறுமலையில் நம் மூதூர் மரங்கள் தோன்றுமே. அந்த இடம் வந்துவிட்டதா?
செயல் முற்றி மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.
 

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்