நற்றிணை 266

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும்,                       5
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல் வாழியர், ஐய! வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?

பொருள்:-

கொல்லைப் புறங்களில் கோவலர் வாழ்வர். ஆங்காங்கே சிறிதாக அமைந்துள்ள காடுகளில் குறுகிய அடியியைக் கொண்ட குரவ மரத்தில் குவிந்த கொத்துக்களாகக் குரவம் பூக்கள் மலர்ந்திருக்கும். அவற்றை ஆட்டிடையர் சூடிக்கொள்வர். இத்தகைய சிற்றூரில் நாம் வாழ்கின்றோம். அதுவே நம் இன்பத்துக்குப் (காமத்துக்குப்) போதுமானது. அதனை விடுத்து மேலும் பொருள் வேண்டும் என்று கருதி என்னை விட்டுப் பிரிந்து செல்வீராயின், ஐய, ஏதோ வீணாக ஒப்புக்கு ஒன்று சொல்கிறேன்; கேட்பாயாக. பிரியின், பிரிந்திருக்கும் காலத்தில் பெரியவர் நிலைப்பாட்டோடு இருக்கவேண்டும். காலத்தில் திரும்பும் பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும். 
தலைவி இவ்வாறு கூறுவதாகத் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்