அகநானூறு 164


கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
2
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்   5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
3
''எவன்கொல் மற்று அவர் நிலை?'' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்    10
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
4
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப் பெறினே!

பொருள்:-
வேந்தன் போரை முடித்துக்கொண்டால் நல்லது என்று தலைவன் நினைக்கிறான்.
1
சூரியன் தன் வெயில் கைகளால் ஈரத்தை வாங்குகிறான். எங்குமே பச்சை இல்லை. பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. நிலம் வெடித்துக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறிக் காடெல்லாம் அழகு பெறும்படி இப்போது பெருமழை பொழிகிறது.
2
காடெல்லாம் பூக்கள். எங்கும் வண்டுகளின் ஆரவார ஒலி. முல்லை, தோன்றி, பூக்களின் மணம் கமழ்கிறது. அந்த மணம் காதல் வெறியை உண்டாக்குகிறது.
3
இப்படி அவள் நினைப்பாள்.
அவர் நிலைமை என்னவோ தெரியவில்லையே! என்று மயங்குவாள். கண்ணீர் மல்க வருந்துவாள். துன்பப்பட்டுக்கொண்டே வாழ்வாள். அவள் பழைய நலத்தைப் பெறும் நல்ல காலம் இது.
4
பகைவரின் மதில் வாயிலை ஒடித்து தந்தப் பூண் சிதைந்திருக்கும் யானையை, போரை விரும்பிக் கட்டுத்தறியை முரிக்கும் யானையை வேந்தன் போர்த்தொழிலிருந்து விடுவித்தால் நல்லது. இவ்வாறு தலைவன் நினைக்கிறான்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்